Home Ads

Thursday 9 August 2018

``பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!”- கவியரசைக் கலாய்த்த கலைஞர்

கலைஞரின் புத்திசாலித்தனத்துக்கும் குறும்புக்கும் சான்றாக இருக்கும் சில உரையாடல்கள் காலங்கள் கடந்தும் நினைத்து நினைத்து சிரிக்க வைப்பவை.
``பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!”- கவியரசைக் கலாய்த்த கலைஞர்
கலைஞர் கருணாநிதியின் புத்திசாலித்தனத்துக்கும் நுண்ணிய நகைச்சுவை உணர்வுக்கும் சான்றாகப் பல சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்தேறியுள்ளன. அத்தனையும் ஆங்கிலத்தில் `Thug Life' என்று சொல்வது போல இருக்கும். அவற்றுள் சில ஒருபானை சோற்றுப் பதமாக...

 ♦எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர்.எச்.வி.ஹண்டே,  தி.மு.க அரசைப் பற்றி கடுமையாக சட்டமன்றத்தில் ஒருமுறை விமர்சித்தார். அதன் வெளிப்பாடாக,``இது மூன்றாம் தர சர்க்கார்'' என்றும் சொன்னார். உடனே ஆளுங்கட்சியினர் வெகுண்டெழுந்தனர். கலைஞர் அனைவரையும் கையமர்த்திவிட்டு, ``டாக்டர் ஹண்டே அவர்கள் இந்த அரசை மூன்றாந்தர அரசு என்றார். திருத்திக்கொள்ளவேண்டும். இது நாலாந்தர அரசு... பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று கூறப்படும் வர்ணங்களில் நான்காவதாகக் கூறப்படும் சூத்திரர்களின் அரசு!” என்று சொல்லி சட்டமன்றத்தைக் கைதட்டலில் உலுக்கினார்.

♦ ஒருமுறை கலைஞர் உடல் நலக்கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது டாக்டர் அவரை பரிசோதிக்கிறார்.
``மூச்சை நல்லா இழுத்துப் புடிங்க”
“இப்போ மூச்சை விடுங்க”
“மூச்சை விடக்கூடதுன்னுதான் டாக்டர் நான் மருத்துவமனைக்கே வந்திருக்கேன்!”


♦செல்வி ஜெயலலிதா, ``நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்வேன்” என்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதற்கு கலைஞரின் பதில் தான் `Thug Life' எனச் சொல்வது போல இருந்தது. ``இந்த அம்மையார் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்களுக்குச் செய்யும் பெரிய நன்மைதான்!” என்றார் கலைஞர்.

♦ கவியரசர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்த போது தேர்தலில் நிற்பதற்காக அவரிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார் கவியரசர். கலைஞருக்கும் அவருக்குமான உரையாடல்...
கண்ணதாசன், ``எந்தத் தொகுதி கேட்டாலும் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி மறுத்து விடுகிறீர்கள். நான் இம்முறை தமிழ்நாட்டில் நிற்கப்போவதில்லை. பாண்டிச்சேரியில் நிற்கப் போகிறேன்..!” என்று சொல்ல,
சிரித்தபடி கவிஞரின் மதுப்பழக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு, ``பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!” என்றாராம் கலைஞர்!

♦ தன் மீது வீசப்படும் பந்தை சிக்ஸர் விளாசுவது அவர் ஸ்டைல். பத்திரிகை ஒன்றின் கேள்வி பதில் பகுதியில் அவர் சொன்ன பதில் இது...
கேள்வி:  `காங்கிரஸைப் பிடித்த தீயசக்தி நீங்கிவிட்டது' என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருக்கிறாரே?'
பதில்: `அந்தக் கட்சியிலிருந்து அவர் விலகிவிட்டாரா என்ன?'

♦ இதுவும் பத்திரிகையில் வந்த கேள்வி பதில்தான்...
 கேள்வி :- அ.தி.மு.க. வில், நாடாளுமன்ற வேட்பாளராக ஜெயலலிதாவுக்காக 255 பேர் தலா 25 ஆயிரம் ரூபாய் கட்டி வேட்பு மனுத்தாக்கல் செய்திருப்பது எதைக் காட்டுகின்றது?
பதில் :- அந்தக் கட்சியில் உள்ளவர்கள் எல்லாம் நன்றாக வளம் பெற்றிருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகின்றது. அந்தக் கட்சியிலே உள்ள அமைச்சர்கள் முதலமைச்சரைப் பாராட்டி சாலையோரங்களில், நடைப்பாதைகளில் வைக்கின்ற கட்-அவுட்கள், ஃப்ளக்ஸ் போர்டுகள், நாளேடுகளில் முதலமைச்சரைப் புகழ்ந்து கொடுக்கின்ற விளம்பரங்கள் போன்றவற்றை வருமான வரித் துறை கணக்கெடுத்தால் எந்த அளவுக்கு அவர்கள் எல்லாம் வளம் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கலைஞரின் சமயோசிதமான பதில்களில் சில...

♦ பி.ஹெச்.பாண்டியன்: ``புலி பசித் தாலும் புல்லைத் தின்னாது!’’
கலைஞர்: ‘‘புல் என்பது புல்லா, bullலா?’’

♦கோவை செழியன்: ‘‘ஆண்டவன் எல்லோருக்கும் சொந்தம். ஆகவே, கோயில்களை எல்லாம் தேசிய மயமாக்கிவிட்டால் பிரச்னை இருக்காது அல்லவா?’’
கலைஞர்: ‘‘ஆண்டவர்களை தேசிய உடைமையாக்கும் உத்தேசம் இல்லை. ஆண்டவன்தான் அனைவரையும் தேசிய மயமாக்கி ரட்சிக்க வேண்டும்!’’

♦குமரி அனந்தன்: ‘‘நான் தொலைபேசியில் பேசியபோது, டிராக் நம்பர் செவன் என்று குரல் வருகிறது. இப்படி ஒரு குரல் வந்ததுமே எனக்கு ஐயப்பாடு...’’
கலைஞர்: ‘‘குமரி அனந்தனுக்கு அப்படியரு கர்ண கடூரமான வார்த்தை காதிலே விழுந்திருக்கிறது. சில நேரங்களில் காதல் வசனங்கள்கூட கிராஸ் டாக்கிலே கேட்கலாம். அதையும் முயற்சி செய்து பாருங்கள்.’’


♦ நூர் முகம்மது: ``முதல்வருடைய கருணை கொண்ட கடைக்கண் பார்வை குமரியின் மீது திருப்பப்பட்டு, அம்மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற்சாலையை அமைக்க, முதல்வர் முன் வருவாரா?’

கலைஞர்: ``குமரியின் மீது கடைக்கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது!''

♦ கே.விநாயகம்: ``மெரினா கடற்கரையின் ஒரு பகுதியில் லவ்வர்ஸ் பார்க் இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல், காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?''

கலைஞர்: ``இந்த விஷயத்தில் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்!'' 

No comments:

Post a Comment