Home Ads

Thursday 9 August 2018

ஒரு கொலை, இரண்டு சூட்கேஸ்கள், மூன்று குற்றவாளிகள்: 50 ஆண்டுகளாக அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சு

50 ஆண்டுகளுக்குமுன் பிரித்தானியாவில் நடந்த கொலையில், இன்னும் குற்றவாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படாத நிலையில், மீண்டும் தூசி தட்டப்பட்ட அந்த வழக்கில் பதிலளிக்கப்படாத கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே நிலைக்கின்றன.

Fred Burggy என்னும் விவசாயி Tattingstone என்னும் கிராமத்திலுள்ள தனது வயலுக்கு செல்லும் வழியில் இரண்டு சூட்கேஸ்களைக் கண்டார்.

அவற்றை அவர் திறந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் தாம் என்ன செய்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் சுமார் ஒரு மணி நேரம் அப்படியே அமர்ந்த பின் தான் பொலிசாரை அழைக்க வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு ஏற்பட்டது.

அப்படி என்ன இருந்தது அந்த சூட்கேஸ்களில்? ஒரு 17 வயது இளைஞனின் உடல், பொட்டுத் துணி இல்லாமல், அழகாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்போது வெட்டுவதுபோல பல துண்டுகளாக வெட்டப்பட்டு இரண்டு சூட்கேஸ்களிலும் வைக்கப்பட்டிருந்தது.


CCTV கெமராக்களோ, சிறந்த தடயவியல் ஆய்வகங்களோ இல்லாத நிலையில் பொலிசாருக்கு தெளிவாகப் புரிந்தது, இந்த குற்றத்தை செய்தவனைக் கண்டிபிடிப்பது இயலாத காரியம் என்பது.

கடைசியாக அந்த சூட்கேஸ்களில் ஒன்றிலிருந்த அந்த இளைஞனின் தலையை சுத்தம் செய்து, கண்களைத் திறந்து ஒரு புகைப்படம் எடுத்து அதை பத்திரிகைகளில் வெளியிட்டனர்.

80 மைல்களுக்கப்பால் லண்டனில் ஒரு சிறுவன் அந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அது தனது நண்பன் Chris Oliverஇன் சகோதரனான Bernard Oliverஇன் புகைப்படம் என்பதை அறிந்து அதை தன் நண்பனிடம் காட்டியபோதுதான் அந்தக் குடும்பத்திற்கு 10 நாட்களுக்குமுன் காணாமல்போன தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்துபோனதே தெரியவந்தது.


பல குற்றச் சம்பவங்கள் குடும்பத்திலுள்ள ஒரு நபராலேயே செய்யப்படுவது சகஜம் என்பதால் பொலிசார் அந்த குடும்பத்தையே கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர்.

ஏற்கனவே தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்த அந்த குடும்பத்திற்கு மேலும் வேதனைதான் அதிகரித்தது.

துப்புக் கிடைக்குமா என தேடிய பொலிசாருக்கு கிடைத்தது சூட்கேஸினுள் இருந்த ஒரு டவல், அதன் ஓரத்தில் QL 42 என்று எழுதப்பட்ட லாண்டரி அடையாளம் மட்டுமே. Bernardக்கு சிகையலங்காரம் செய்யப்பட்டு, அவனது நகங்கள் மானிக்யூர் செய்யப்பட்டிருந்தன. அவன் வயிற்றில் நிறைய உணவு இருந்தது.


அத்துடன் அவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தான். பொலிசார் ஓரினச் சேர்க்கையாளர்களைக் குறிவைத்து தேட ஆரம்பித்தார்கள்.

Martin Reddington மற்றும் John Roussel Byles என்னும் இரண்டு மருத்துவர்கள் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதில் Reddington ஏற்கனவே ஒரு ஆணை துஷ்பிரயோகம் செய்திருந்ததோடு அந்த சூட்கேசும் அவனுடையது என துப்பறிவாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் அந்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை.

தனது 63 ஆவது வயதில் Reddington இறந்தான். John Roussel Byles சம்பவம் நடந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அறையில் தற்கொலை செய்துகொண்டான்.

அவனது அறையில் ஒரு கடிதம் இருந்தது, அதில் பொலிசாரிடம் தான் செய்த ஒரு குற்றத்திற்காக அவன் மன்னிப்புக் கோரியிருந்தான், ஆனால் என்ன குற்றம் என்று அவன் குறிப்பிடவில்லை.

சந்தேகப் பட்டியலில் இருந்த இன்னொரு நபர் ஒரு புகழ் பெற்ற இசைத்தட்டு தயாரிப்பாளர்.


பல மன நல பிரச்சினைகள் கொண்ட Joe Meek என்னும் அந்த நபர் Bernardஇன் உடல் கண்டெடுக்கப்பட்ட இரண்டரை வாரங்களில் தற்கொலை செய்து கொண்டார். பொலிசார் தன்னை விசாரிக்க வருவார்கள் என்று அஞ்சி அவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிறது.

இன்னும் பலர் இதேபோல் சந்தேகப் பட்டியலில் இருந்தாலும் அவர்கள்தான் குற்றம் செய்தவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, அவர்களில் பெருமாலோர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதைத்தவிர.

குற்றம் நடைபெற்று 50 ஆண்டுகள் முடிந்துவிட்டதை நினைவுகூரும் வகையில் மீண்டும் 2017ஆம் ஆண்டு இந்த வழக்கு தூசி தட்டபட்டு மீண்டும் திறக்கப்பட்டது என்றாலும் இன்னும் Bernardஐக் கொன்றது யார் என்பதைக் கண்டுபிடிக்க இயலவேயில்லை.

சம்பவம் நடைபெற்று 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் Bernardஐக் கொன்றது யார் என்பது இன்னும் விலகாத மர்மமாகவே உள்ளது.

No comments:

Post a Comment