Home Ads

Saturday 13 December 2014

வேரோடி : ஒரு தலைமுறையின் வலி

லீவு விட்டாச்சு.. பாட்டி கிராமத்துக்கு கூட்டிட்டு போவாங்கன்ற உற்சாகத்துல துள்ளிகிட்டே வீட்டுக்குள் நுழையும் போதே,பெட்டியில் பாட்டி துணிமணிகளை அடுக்கிக் கொண்டே, ‘ கடன்காரன் பரணைல இருந்து இத எடுத்துக் கொடுக்கக் கூட ஒத்தாசை பண்றானா பார்’,என்று வெளியே கிரிக்கெட் விளையாட போன அண்ணனை அர்ச்சித்துக் கொண்டு இருந்தாள்.

அம்மாவிடமிருந்து ஊருக்குச் சென்று இலவச விநியோகம் செய்ய வாங்கின சட்டை,பேண்ட்,வேட்டி துணி வகைகளே ஒரு தனிப் பெட்டியை அடைக்கும் அளவுக்கு நிரப்பிக் கொண்டிருந்தாள்.

”பதிலுக்கு அவன் ஒரு மணி நெல் கொடுக்க போறதில்ல,இதுக்கு எதுக்கு நீங்க,  இத்தனையை சுமந்துண்டு போகனும்” என்ற அம்மாவின் ஓங்கிய குரலுக்கு, “என்ன கொண்டு வந்தீங்கம்மா?”ன்னு தலைய சொறிஞ்சுண்டு நிப்பாங்கடி பாட்டியின் தாழ்ந்த குரலில் அங்கலாய்க்கும் சமாதானம் ஒலிக்கும்.

ஒரு வழியாக சோற்று மூட்டை, துணி மூட்டையுடன் நானும் அண்ணனும் துணையாக(?) பாட்டியின் ஊருக்கான பிரயாணம் துவங்கும்.


ஜன்னல் சீட்டுக்கு சண்டை பிடித்து  அழுது  ஒரு வழியாக பாதி தூரம் நீ,பாதி தூரம் அவன் என்று பாட்டி நாட்டாமையாகி தீர்ப்பளித்து பஞ்சாயத்து,  பெட்டியில் மற்றவர்கள் பார்வையெல்லாம் சட்டை செய்யாது முடியும்.

பிறகு அவிழும் சோற்று மூட்டை,எதுக்கு பாட்டி இத்தனை எடுத்துண்டு வந்து மானத்த வாங்கறானு கூச்சமா இருந்தாலும்,வேடிக்கை பாத்துண்டே  சாப்பிடுங்க பாக்கலாம்னு பாட்டி சொன்னதும் ஜன்னலில் பார்வை பதித்து சாப்பிட்டுக் கொண்டே, சிறிது நேரத்தில் கூச்சமே இல்லாமல் அத்தனையும் தின்று தீர்த்தது தெரிய வரும்.

ரயிலுக்கு பின்னாடி எல்லாம் ஓடுது பார். இப்படி குனிஞ்சு பாத்தா ரயிலோட தலை தெரியுது பார்னு செப்படி வித்தைக்காரன் மாதிரி அண்ணன் சொல்றதெல்லாம் ஆ-ன்னு  வாயைப்பிளந்து, அவனுக்கு ஜன்னல் சீட்டை தாரை வார்த்தது தெரியாமல் கேட்டுக்கொண்டிருப்பேன்.

ஸ்டேஷன் வருவதற்கு முன்னாடி ரயில்லயே சிகை அலங்காரம்லாம் நடக்கும். இப்ப ஏன் பாட்டி இதெல்லாம்ன்ற கேள்விக்கு, தலையும் வேஷமுமாவா போய் நிப்பாங்க என்று பாட்டி ஒரு கொட்டு கொட்டினால் கப்சிப்.

ஸ்டேஷனில் இறங்கியதும் அம்பியாக இருந்த பாட்டி, ரெமோ,அந்நியன்னு பல வாய்ஸ் மாடுலேஷன்ல பேசறத வாயப்பொளந்து பாத்துட்டிருப்போம். நடையில், பேச்சில் எல்லாத்திலும் ஒரு புது பாட்டியை பார்க்க முடியும். ‘என் இடம்’ன்ற உற்சாகம் கொப்பளிப்பதை பார்க்க முடியும்.




கிராமத்துக்கு போற வழியெல்லாம் ஒரு வருட மாற்றங்களை வண்டி ஓட்டறவர் கிட்ட கேட்டு எல்லாம் மாறி போச்சும்மான்ற வாசகம் வரும் போது வீட்டை அடைந்து விட்டிருப்போம்.

பூட்டி கிடந்த வீட்டை சுத்தம் செய்து, குழந்தைகளுக்காக கொண்டு வந்தேன்மானு சொம்பில பால்,கிண்ணத்துல வெண்ணெய்,தயிர்னு ராமாயி அம்மா ரெடியா நின்னுட்டு இருப்பாங்க.

கட்டி பிடித்து முத்தம் கொடுக்கையில் ராமாயி அம்மாவின் சேலையில் ஒரு பால்,சாணம்,தயிர்னு கதம்ப மணம் கமழும்,கூச்சத்துடன் நெளிந்து விடுவித்து கொள்வேன்.

அம்மா வந்திருக்காங்கனு  நிறைய பேர் வந்து பாட்டி கிட்ட பேச துவங்கும் போது பாட்டியை இது வரை கண்டிராத ஒரு வெர்ஷனில் பார்க்க முடியும்.வேடிக்கை பார்க்கும் நம்மை தேடி ஒரு க்ருப் வரும்,அண்ணன் எப்பவோ காணாமல் போய் விட்டிருப்பான்,குளிக்க போக பாட்டி அனுமதி கொடுத்ததும் தோழிகளுடன் பம்பு செட்டுக்கு ஓடி எருமை மாடு மாதிரி ஊறி குளித்து,ஒரு வருட ஸ்கூல் கதையெல்லாம் சொல்லி வாய் வலிக்க பேசி ஒரு தருணத்தில் ஐயோ எவ்ளோ நேரம் ஆச்சு பாட்டி கொன்னுடுவான்னு தோண அவளுங்கள இழுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடுவோம்.

பக்கத்து வீட்டு வைதேகி மாமி நடுவில் இழுத்து, ஏண்டி பொண்ணே  புது தண்ணீல ஆடினா காயலா படுத்துக்கவானு திட்டி சாம்பிராணி புகை போட சுகம்மா கண்ணை இழுத்துட்டு ஒரு தூக்கம் வரும் போது,வந்து கூட்டிண்டு போற பாட்டி குமுட்டி அடுப்பில சமைச்ச சாதத்தை போட சாப்பிட சாப்பிடவே தூங்குவோம் நானும் அண்ணனும்.

வாசலில் வாக்குவாதம் செய்யும் பாட்டியின் குரலில்,  பொழுது அமிழும் நேரம் உறக்கம் கலையும்.எப்ப பாத்தாலும் எதாவது நொறநாயம் சொல்லிண்டே இருடானு  கோவிந்தன் மாமாவிடம் சத்தம் போட்டுக் கொண்டிருப்பாள் பாட்டி.

கொண்டு வந்த துணிகளில் பாதி அவர் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருக்கும்.கொண்டு வருவதை முழுவதும் கொடுக்காமல் வந்த முதல் நாள் பாதியையும் கிளம்பும் நாள் மீதியையும் பாட்டி கொடுக்கும் ரகசியம் இன்று வரை புரிந்ததே இல்லை.

ஏண்டா இவன எதாவது டாக்டர்ட்ட கூட்டிண்டு போறது தான என்று சொறியும் சிரங்குமாய் இருக்கும் அவர் மகனை பார்த்து கேட்டுக்கொண்டே இந்தா என்று ஆயின்மெண்ட்,டெட்டால் என்று எடுத்து கொடுப்பாள்,ஸ்கூலுக்கு அனுப்பறயா இல்லியா என்று கடிந்து கொள்வாள்.

தூக்கம் கலைந்து தலையும் வேஷமுமாய் வரும் என்னை பார்த்ததும் பாப்பா அப்படியே உங்களை உரிச்சு வைச்சிருக்குதும்மா என்று ஃபுல் டாஸ் ஒண்ணு போட்டு பாட்டியை காலி பண்ணி,பஜ்ஜி,காபி என்று ஃபுல் கட்டு கட்டிவிட்டு இடத்தை காலி பண்ணுவார் கோவிந்தன் மாமா.

அடுத்த நாள் காலையில் துயிலெழுந்ததும் குளித்து முடித்து பாட்டியுடன் கோவிலுக்கு செல்லும் படலம் துவங்கும்.  வழி முழுவதும் ஒவ்வொருவர் வீட்டிலும் நின்று கதை பேசி நாம் பொறுமையின் இறுதி எல்லையை சுத்தமாக தொலைக்கும் நேரத்தில் ஒரு வழியாக கோவிலை எட்டி விட்டிருப்போம்.இந்த கூத்துக்கெல்லாம் அண்ணன் வருவது இல்லை,விடியுமுன் எழுந்து பாட்டி தரும் நீராகாரத்தை முங்கி முங்கி குடித்து விட்டு ஊர் சுற்ற கிளம்பினால் மதியம் வரை ஆளை காண இயலாது.

சிவன் கோவிலில் குருக்களின் செளக்கியங்கள்,பெருமாள் கோவிலில் பட்டரின் காலஷேபங்கள் குறித்து விசாரித்து முடியும் வரை பொறுமையுடன் உடன் இருத்தல் வேண்டும்,அங்கங்க பாப்பா உங்கள மாதிரியேம்மா டயலாக் கேட்க பாட்டிக்கு பிடிக்கும் அதற்காகவேணும் என்று பிற்காலத்தில் புரிந்தது.

முதல் நாளுடன் இந்த ஊர் சுற்றல் நிறைவு பெறும் நமக்கு. பின் தினமும் கோவிந்தன் மாமாவுடன் வயலுக்கு செல்வது, கிணற்றங்கொல்லையில் தக்காளி,கீரை,கத்திரிக்காய் என்று கூடை கூடையாய் பறித்து, வழி நெடுக பாப்பா கறிகாய் பறிச்சுட்டு போவுது டோய் எனும் பாச குரல்களுக்கு வளைந்து நெளிந்து (கூச்சமாமாம்) சிரித்து வைத்து வீடு வந்து சேர்வோம்.

நாட்கள் வாரங்களாகி  ஊர் திரும்பும் நாள் வரும்,கண்ணீருடன் கட்டி பிடித்து வழியனுப்ப தோழிகள்,பாட்டிகள்,மாமிகள் என்று ஒரு நாள் பிரிவு உபசாரம் முடிந்து ரயிலேறும் அன்று கொண்டு வந்த எல்லாவற்றையும் விநியோகித்து காலி பெட்டியுடன் ரயில் நிலையம் சேர்ந்து,ரயில் கிளம்பும் நேரம் இந்தாடா கொழைந்தைக்கு பால்,கீல் வாங்கி கொடு என்று  சில நூறு ரூபாய் நோட்டுகளை கோவிந்தன் மாமா கையில் கொடுத்து இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்ட பாட்டியின் உணர்வுகள் அவளுக்கு மட்டுமே புரிந்த தனிக்கதை.

வாங்கம்மா என்று வரவேற்கும் அம்மா ஒன்றும் கேட்காமல்,என்னத்தடி சொல்ல அவன் ஒண்ணும் கொடுக்கல,தண்ணீ இல்ல,பூச்சி அடிச்சிடுத்துன்றான் என்னத்த நம்ப என்று தானாகவே தன்னிலை விளக்கம் கொடுக்கும் பாட்டி,அந்த மனுஷன் இருந்தா எனக்கு இந்த நிலை வருமா என்று அங்கலாய்த்துக் கொள்வது பார்க்க சகிக்காது.

இப்ப என்ன ஆச்சுனு பொலம்பறீங்க ,வித்து தொலைச்சிட்டா போறது எனும் சொற்களை கேட்டதும் பாட்டி கண்களில் சுளிர்னு ஒரு வலி தெரியும்.பகவான் புண்ணியத்தில் நல்லா இருக்கோம்,அது போறாதாம்மா என்று ஆறுதல் கூறிக் கொண்டே செல்லும் அம்மா அதை உணர்ந்திருப்பாளா என்று புரியாது.

மெதுவாய் எழுந்து சென்று தலைக்கு குளித்து விட்டு அன்று எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரம் பூஜை அறையில் இருப்பாள் பாட்டி.

இதையெல்லாம் புரிந்து கொள்ள இயலாத வயது எனினும் இந்நிகழ்வுகளை இப்போது அசை போட்டால் அவள் வலியை உணர முடிகிறது.

ஊர் பாசம் என்பது அவ்வளவு வலியதானு யோசிக்க தெரியாத வயது எனக்கு அப்போது,கிராமத்து அனுபவங்களை பள்ளியில் பெருமையாய் விவரிக்க வார்த்தைகளை மட்டும் தேடி கொண்டிருந்தேன்.

No comments:

Post a Comment