Home Ads

Thursday 11 December 2014

ஆம்பள

ஆண் குழந்தைகள் தான் வேணும்னு நினைக்கிற மனிதர்கள் இன்னும் உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு பாரம்பரியத்தை தொடரவோ ஒரு தொழிலுக்கு வாரிசாகவோ ஒரு ஆண் குழந்தையின் தேவை இருந்து கொண்டு தான் இருக்கிறது.பெண்ணால் வாரிசாக முடியும் இன்ன பிறவும் இயலும் என்று அறிந்தாலும் ஒரு ஆண் மகவை பெற்று அதை சாதிக்க துடிக்கும் மக்களும் இங்கு தான் இருக்கிறார்கள்.

அவன் ஆம்பளடி...சிறுமிக்கு புகட்டப்பட்டு விடுகிறது ஆண் வேறு விதமாக பார்க்கப்படவேண்டியவன் என்று.

சுமாரான வசதியுள்ள குடும்பங்களில் உணவு வகைகளிலெல்லாம் பாரபட்சம் பார்க்கும் மனநிலை இல்லை என்பது என் புரிதல்.

பூப்பெய்தும் பெண்ணுக்கு திடிரென கிடைக்கும் உபசாரங்கள், உணவு வகைகள், ஆடை அணிகலன்கள் இவை கூடவே வளரும் ஆணுக்கு கொஞ்சம் ஆற்றாமையை விதைத்து தான் செல்கிறது,எனக்கு ஏன்மா புது ட்ரெஸ் எடுக்கல கேள்விக்கு நீ ஆம்பளடா பதிலாக கிடைக்கிறது.அவன் இஷ்டத்துக்கு ஊர் சுற்ற கிடைக்கும் சலுகைகளுக்கு அம்மாவிடம் புகார் கூற எத்தனிக்கையில் கிடைக்கும் பதில் அவன் ஆம்பள பையன் அப்படி தான் இருப்பான்.ஆம்பள பையனா இருந்தா கிடைக்கும் சலுகைகளை பற்றி பெண்ணும், பெண் பிள்ளையாய் இருந்தால் கிடைக்கும் செல்லங்களை பற்றி அவனும் அலுத்துக் கொண்டே நடக்கும் பாதையில் புதிய திருப்பங்கள் வரும்.

கல்லூரி படிப்பு முடித்ததும் பெண்ணின் விருப்பத்துக்கு ஏற்ப மேற்படிப்போ வேலையோ,திருமணமோ என்று இன்னொருவன் இல்லத்தில் நுழைந்து  வாழ துவங்குகிறாள் பெண்.

கல்லூரி வயது வரை அவன் சலுகைகளுக்கு காரணமாக இருந்த ‘ஆம்பள’முத்திரை பிறகு அவனுக்கு சுமையாக மாறுகிறது.ஆம்பளயா லட்சணமா வேலைக்கு போ,ஆம்பளயா லட்சணமா அதிகமா சம்பாதி,ஆம்பளயா லட்சணமா தங்கைக்கு சீர் செய்,ஆம்பளயா லட்சணமா அப்பா கடன அடை,ஆம்பளயா லட்சணமா குடும்பத்தை கரையேத்து,இதிலெல்லாம் பிறழ்ந்தால் தறுதல,குடும்பத்து உதவாது பட்டங்கள் இலவசம்.

ஆணின் பணம் சம்பாதிக்கும் திறனை வைத்து தான் அவன் சமுதாயத்தில் எடை போடப்படுகிறான்.அதிகமா சம்பாதிப்பவனுக்கு உறவுகள் மத்தியில் ‘அவன் ஆம்பள’பட்டம் உறுதி.இதை தக்க வைச்சுக்க அவன் எவன் எவனோ கைல குட்டு வாங்கி,மிதி வாங்கி,அதெல்லாம் வெளிய தெரியாம சமாளிச்சு,ஷப்பாஆ. ஒவ்வொரு மாதமும் அவன் வங்கி கணக்கில் விழும் பணமே அவன் ஆட்டம்.இந்த ஆட்டத்தில் அவனும் ஆர்வமாக தான் பங்கு பெறுகிறான்.

நல்ல வேலை கிடைச்சதும் திருமணம்.சொந்த வீடு,கார்,வெளிநாட்டில் வேலை இருக்கற ஆம்பளைக்கு தான் மார்க்கெட் வேல்யூ அதிகம்.வார இறுதி ஷாப்பிங் செலவுகள்,வருட இறுதி வெளிநாட்டு சுற்றுப்பயணம்னு ‘ஆம்பள’மீதுள்ள எதிர்பார்ப்புகள் எகிற துவங்கும்.வெட்டிங் டே,பர்த்டே,லவ் டே நு  எல்லாத்துக்கும் கிப்ட் கொடுக்கனும்,மனைவி எதிர்பார்க்கலைன்னாலும் உங்க வீட்டுக்காரர் என்ன வாங்கி கொடுத்தார் கேள்விகளுக்காகவேணும்.

கல்யாண வீடுகளுக்கு புறப்படுகையில் ஆணுக்கு ஒரு மெல்லிய சங்கிலி கூட இல்லாமல் போனாலும் மனைவியை நகை கடை விளம்பரம் போல் அலங்கரித்து அழைத்து சென்றால் தான் ‘ஆம்பள’ பிரமிப்பை காப்பாற்ற இயலும்.குழந்தை குட்டி ஆனதும் எல்லா விதமான சமீபத்திய மிண்ணனு வரவுகளை பையனுக்கும்,பெண்ணுக்கு அவள் விரும்பும் அனைத்தையும் இரட்டிப்பாக செய்ய வேண்டும்,அவள் தானே அந்த குடும்பத்து தேவதை,மகாலஷ்மி என்ற பூரிப்புடன்.

குடும்பத்துக்கு தேவையான பொருளாதார,சமூக,உணர்வு பூர்வமான பாதுகாப்பு கவசங்களோடு இந்த அமைப்பை ’ஆம்பள’ தாங்கி நிற்க வேண்டும்.

’ஆம்பள’ எனும் ஈகோவில் அடிச்சா எந்த ஆணாலும் தாங்கி கொள்ள முடியாது.அந்த பட்டமே அவன் பலமும் பலவீனமுமாக மாறி போகிறது.எல்லாவற்றையும் தாண்டி பார்த்தா அப்பா என்கிற ஆண்,அம்மாவுக்கு இணையான அத்தனை தியாகங்களும் செய்தாலும் அவன் ‘ஆம்பள’ கல்யாணம் கட்டிகிட்டா இதெல்லாம் செஞ்சு தான ஆகனும்,ஊர்ல எந்த ஆம்பள செய்யல எனும் வார்த்தைகளுடன் அமிழ்ந்து போகிறது பெரும்பாலும்.

உண்மையில் ‘ஆம்பள’எனும் அங்குசம் கொண்டு அந்த யானையை கையிலடக்கிய அம்மாவின்அன்பு வித்தை மனைவிகளுக்கு கைவருவதில்லை.

மது,நட்பு வட்டம் என்று ஒரு வட்டத்துக்குள்  சிக்கி தம் சுமைகளை இறக்கி வைக்கும் ஆண்கள் பரிதாபத்துக்குரியவர்களே.

சாதாரண குடும்பத்து பெரும்பாலான ஆண்களை பற்றிய என் எண்ணங்கள் இவை,பெண் குழந்தைன்னா மட்டமா?ஆம்பள எனும் போர்வையில் செய்யும் பாலியல் வன்கொடுமைகளை ஆதரிக்கிறாயா எனும் பெண்ணியவாதங்களுக்குள் நான் நுழையவில்லை.

பெண் குழந்தைகள் தேவதைகள் எனும் என் நிலைப்பாட்டில் எனக்கு சிறிதளவும் மாற்றமில்லை,எனினும் ஆண்களின் சில இனங்கண்டு கொள்ளப்படாத சுமைகளை பற்றிய என் எண்ணங்களே இவை.

சில ஆண்கள் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த ஆண்களையும் குற்றம் சொல்வது,பெண்களுக்கும் பொருந்தும் தானே என்பதில் பிறழ்ந்து போகிறோம்.

என்னுடன் வளர்ந்து இந்த சுழலில் சிக்கிய அண்ணன்கள்,நட்பு,கணவன் என்று சில ஆண்களின் ‘ஆம்பள’ எவ்ளோ சுமையானது என்பதை அவ்வப்போது எட்ட நின்று பார்த்ததால் இந்த பதிவு.

No comments:

Post a Comment