Home Ads

Tuesday 14 August 2018

எனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது– ரகசியம் உடைத்த ராகுல் காந்தி

‘எனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி பதிலளிக்கையில், ‘எனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. காங்கிரஸ் கட்சியையே நான் மணம் முடித்தேன்’ என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் பிற கேள்விகளுக்கு ராகுல் கூறியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக 230 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது. எனவே, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்ற பேச்சுக்கே இடமில்லை.

உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் எதிர்க்கட்சிகள் அமைக்கவுள்ள கூட்டணியால், பாஜகவின் பலம் வெகுவாக குறையும். காங்கிரஸ் கட்சியின் அந்தந்த மாநிலப் பிரிவுகள் ஒத்த கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் கூட்டணி அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். எனினும், அதை அவர் நிறைவேற்றவில்லை. சீனாவில் 24 மணி நேரத்தில் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதேசமயம், இந்தியாவில் வெறும் 458 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது என்றார் ராகுல் காந்தி.

No comments:

Post a Comment