Home Ads

Tuesday 16 December 2014

என் காதல்

ஒரு மழை நாளில் அப்படின்னு வர்ணித்து துவக்க முடியாதபடி, நல்லா மண்டையைப் பிளக்கற ஒரு வெயில் நாளில் தான் **அவனை** முதன் முதலில் சந்தித்தேன்.

கதைகளில் வரும் தேவதைகள் தான் வெள்ளுடுப்பு போட்டுக் கொண்டிருக்கும் என்பது இல்லை. அழுக்கு வெள்ளை உடுப்பும் கையில் கிரிக்கெட் மட்டையுமாய் ஒரு ஆறடி உயரம் நின்றுக் கொண்டிருந்தது எங்கள் நட்பு வட்டத்தில்.

பார்த்ததும் எதோ ஒரு ஈர்ப்பு.. யார் இது புதுசா என்று தோழி கேட்க, நீங்கள்ளாம் பாத்ததில்லல்ல. எப்ப பாத்தாலும் மேட்சுன்னு போயிடுவான் என்று நண்பன் அறிமுகம் செய்து வைத்தான்.

ஹாய்..ஹலோ சம்பிரதாயங்களுக்குப் பிறகு கலைந்தோம். திரும்பி நடக்கும் தருணத்தில் என்னையறியாது திரும்பி பார்த்தது கண்கள். அதே நேரம் அவனும் திரும்ப,  தொலைந்தது மனது.

அடுத்த வாரம் எங்கள் தோழிகள் குழு ஊர் சுற்றுவதென தீர்மானித்து பீச்சுக்கு கிளம்பினோம். நல்ல வெயில்ல இப்படியெல்லாம் லூசுத்தனமா யோசிக்க எங்களால தான் முடியும். ( ஆமா நான் படிச்சதெல்லாம் சென்னையிலே தான் ).

அந்தக் கூட்டத்தில இருந்த எவளோ ஒருத்தி விஷயத்த லீக் பண்ண, பசங்க கும்பல் எங்களுக்கு முன்னே அங்க ஆஜர். அங்க நம்ம நாயகனும் ஆஜர்.

எல்லோரும் தண்ணீல கால் நனைக்க போக,நான் கரையிலேயே நின்னாச்சு. ட்ரெஸ்ல மணலும் தண்ணியும் இருந்தா பாட்டி கண்டுபுடிச்சு டின்னு கட்டிடுவாங்க. அதான்.

அலையில் சற்று நேரம் நின்று விட்டு வந்து என்னருகில் அமர்ந்து பேசத் துவங்க,  நானும் சரளமாக என் கூட படிச்ச பசங்க கிட்டலாம் பேசற மாதிரியே  உளறிக் கொட்ட ஆரம்பிச்சேன். நல்லதொரு சுவாரஸ்யத்துக்கு பேச்சு திரும்பிய போது நண்பரொருவன் வந்து ’எந்திரி போரடிக்குது வேற எங்கனா போகலாம் எல்லாரும்’னு கேட் போட்டான்.

எங்க குழு கொதிப்படைந்து. உங்களலாம் யார் கூப்ட்டா? ஓடிடுங்கடா என்று மிரட்டத் துவங்கவும் கலைந்து சென்றார்கள்.சின்ன வயதிலிருந்து ஒன்றாக பயின்ற உரிமை எங்களுக்கு.

பிறகு எங்கள் வீடு,கோவில் என்று எங்கள் நட்பு வட்டம் கூடும் அத்தனை இடங்களிலும் அவன் ஆஜர் ஆனான். பிறிதொரு நாளில் அவன் என்னை மிஸ் பண்ணிட கூடாது என்பதற்காகவே அவனுக்கு ரொம்பவும் பிடித்த கிரிக்கெட் கேரியரையே விட்டான் என்பது செய்தி. எனக்கு அதன் அருமையெல்லாம் தெரியாது. அதனால என்ன என்பதாய் தட்டி விட்டேன்.

’அலையாய் மாறி எனை அடித்தாய்,பின் கரையாய் மாறி எனை இழுத்தாய்’ கவிஞர் தாமரையின் 'பார்த்த முதல் நாளே’  பாடலின் வரிகளனைத்தும் எனக்காகவே எழுதப்பட்டது போல் உணர்கிறேன். இன்றும் என் தனிமையில் விரும்பிக் கேட்கும் பாடல் அதுவேயானது.

நட்பை தாண்டிய ஈர்ப்பு இருந்தாலும், அவசரப்படாமல் மிக நிதானமான நட்பாக வளர்த்து, தேவர்கள் பூத்தூவிய ஒரு இனிய நாளில் எங்கள் காதலை உணர்ந்தோம். அதன் பிறகு படிப்பு, வேலை என்று கட்டாயங்களில் சிக்கிக் கொண்டு காதலிக்க முடியாமல் போனாலும், நட்புக்கு அவை இடையூறாய் இருந்ததே  இல்லை இன்று வரை.

அவனுடனான இத்தனை வருட நட்புப் பயணத்தில் சண்டைகள் வந்தாலும், ஒருவரை விட்டு ஒருவர் விலகி இருத்தல் இயலாது என்று இன்று வரை உணர்கிறோம்.

முத்தம், காமம் என்னும் ஹார்மோன்களை உணர்ச்சிகளைத் தாண்டி  சில நாட்களில் வெறுமனே அணைத்தபடி அமர்ந்திருக்கும் முதிர்ச்சி எங்கள் இருவருக்குமே இருப்பதும் ஒரே அலைவரிசையின் வேலையாய் இருக்கக் கூடும்.

என் திறமைகளையும் வலிகளையும் என்னை விட  அதிகம் அறிந்தவன் அவன். நீச்சல் பழகக் கை பிடித்து அழைத்து செல்லும் இனமல்ல. நீச்சல் குளத்தில் தள்ளி விட்டு ஏறி வா எனும் மனம்.

கண்ணீர் பிடிக்காத மனிதன் அவன். கண்ணீருடன் சொல்லும் ஒரு வார்த்தையும் காதில் ஏறாது.மொதல்ல போய் அழுது முடிச்சுட்டு என் முன்னாடி வா,பிறகு சொல் எனும் கல்நெஞ்சக்காரன்.

பல பல சொல்ல முடியாத இடையுறுகளைத் தாண்டிக் கரம் பிடித்து, இன்றும் இடையூறுகளுடன் வாழ்ந்தாலும், அவனுக்காக எதையும் செய்யும் என் மன உறுதி அதிகரிக்கவும் அவனே காரணம்.

லவ் யூ, மிஸ் யூன்னு எல்லாம் வெளிப்படையாகச் சொல்லிச் சொல்லிக்  காதலிக்கத் தெரியாது அவனுக்கு. ஆனால் அவன் கண்களிலும், வார்த்தைகளிலும் ஒளிந்திருக்கும் லவ் யூக்களையும், மிஸ் யூக்களையும் பிரித்தெடுக்கத் தெரியும் எனக்கு.

எங்கள் நண்பர்கள் குழுமத்தில் இன்று வரை எங்கள் நட்பையும் காதலையும் பார்த்து வியந்து தான் போகிறார்கள்.

இதே நட்புடன் இன்னொரு நூறு ஆண்டுகளாவது அவனுடன் வாழ்வை வாழ்ந்து முடிக்க வேண்டும்.

1 comment: